ஹைதராபாத் தேர்தல்.. வாயை விட்ட டிஆர்எஸ் தலைவர்கள்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜேபி நட்டா
ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் சாதாரண தெரு தேர்தல் என்று எப்படி டிஆர்எஸ் கட்சி சொல்லலாம் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பினார். அத்துடன் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஹைதராபாத் மாநகராட்சி (ஜி.எச்.எம்.சி) தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. டிசம்பர் 1ம்தேதி தேர்தல் நடக்கிறது,. ஹைதராபாத்தை கைப்பற்றுவதில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக தெலுங்கானாவில் எதிர்க்கட்சி ஆகும் அளவுக்கு வளர்ந்துள்ளது. எப்படியாவது ஹைதராபாத் மாநாகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைவர்கள் உறுதியாக உள்னர்.
மனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்!
ஹைதராபாத்
தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய தலைவர்கள் அனைவரும் முகாமிட்டுள்ளனர். நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நடா உரையாற்றினார்.
மோடி அரசு
கொரோனா தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்து வரும் மோடி அரசாங்கத்தின் முயற்சிகளை விரிவாக பேசிய ஜேபி நட்டா, தெலுங்கானாவை ஆளும் டிஆர்எஸ் அரசு பல்வேறு துறைகளில் ஊழல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வதற்காக ஹைதராபாத்திற்கு வருகை தரும் உயர்மட்ட தலைவர்கள் குறித்து டிஆர்எஸ் தலைவர்கள் விமர்சித்தற்கும் கடும் பதிலடி கொடுத்தார்.
அவமானம்
இது தொடர்பாக ஜேபி நட்டா பேசுகையில், எனது வருகைக்கு முன்னர், அவர்கள் (டிஆர்எஸ்) ஒரு தெருவில் நடக்கும் தேர்தலுக்காக ஒரு தேசியத் தலைவர் வருவதாகக் கூறினார்கள் இப்படி பேசும் அவர்களின் மனநிலை என்ன என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இது ஹைதராபாத் வாக்காளர்களுக்கு அவமரியாதை. ஒரு ஜனநாயகத்தில், ஹைதராபாத் ஒரு தெருவா? 74 லட்சம் வாக்காளர்கள், 5 மக்களவை தொகுதிகள், 24 எம்எல்ஏக்கள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற ஊர். ஆனால் அவர்களுக்கு இது ஒரு தெருவாக தெரிகிறது.. நீங்கள் ஹைதராபாத்தை ஒரு தெருவாக நினைத்தாலும் நாங்கள் உங்கள் ஊழலை அழிக்க ஒவ்வொரு இடத்திற்கும் வருவோம்" என்றார்.
காங்கிரஸ் மீது தாக்கு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியில் (பிஏஜிடி) இணைந்துள்ளதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காங்கிரஸையும் தாக்கினார்.
370 வது பிரிவை மீட்டெடுக்க சீனாவின் உதவியை நாடுவதாக ஃபாரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். அவருடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. "பிரதமர் மோடி ஜியை தொடர்ந்து எதிர்க்கும் அதே வேளையில், காங்கிரஸ் நாட்டை எதிர்க்கவும் தொடங்கியுள்ளது. இப்போது குப்கர் கும்பலுடன் நிற்கிறது" என்றார்.