பார்வையற்ற தம்பதி.. மகன் இறந்தது தெரியாமல், சடலத்திடம் 4 நாள் பேசிட்டேயிருந்தாங்களாம்.. ஐதராபாத்தில்
ஹைதராபாத்: பார்வையற்ற தம்பதியை நினைத்து, ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலமும் பரிதாபத்தை பதிவு செய்து வருகிறது.. வயது முதிர்ந்த இந்த தம்பதிக்கு என்ன நடந்தது? யார் இவர்கள் என்பது குறித்தெல்லாம் போலீசார் தந்துள்ள விளக்கம் என்ன?
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வருகிறார்கள் இந்த தம்பதி.. இருவருக்கும் பார்வை கிடையாது.. வயதான இவர்கள் பார்வையற்றவர்களுக்கான காலனியில் வசித்து வந்திருக்கிறார்கள்.. எந்த வேலையையும் செய்து கொள்ள முடியாத நிலையில், தங்களது 30 வயது இளைய மகனின் துணையுடன்தான் இருவருமே வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்..

சந்தேகம்: இந்நிலையில், அவர்களுடைய வீட்டிலிருந்து கடந்த சில நாட்களாகவே துர்நாற்றம் வீச துவங்கியது.. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக நகோல் போலீசிடம் இதுகுறித்து தகவல் தந்தனர்..
போலீசாரும் உடனடியாக அந்த தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான், வீட்டிற்குள் அந்த தம்பதியின் 30 வயது மகனின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த சடலம் அழுக துவங்கியிருந்தது.. 4 நாட்களுக்கு முன்பே இரவில் தூக்கத்திலிருந்தபோது, அவரது உயிர் பிரிந்திருக்கிறது.. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாப்பாடு: இந்த சம்பவம் குறித்து உயரதிகாரி சூர்யா நாயக் சொல்லும்போது, "மகன் உயிரிழந்தது பற்றி, பார்வையற்ற தம்பதிக்கு எதுவும் தெரிய வரவில்லை. அவர்கள் இந்த 4 நாட்களும் தங்கள் மகனிடம் சாப்பாடும், தண்ணீரும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். மகனின் பெயர் சொல்லி கூப்பிட்டு கொண்டே இருந்திருக்கிறார்கள்.. ஆனால், எவ்வளவு முறை சத்தமாக அழைத்தும் கூட, அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.
இதனால் வயது முதிர்ந்த அந்த தம்பதியினர், 4 நாட்களாகவே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வந்துள்ளனர். ஒருகட்டத்துக்கு மேல் அவர்களால் சரியாக பேசவும் முடியவில்லை.
மூத்த மகன்: வயதானவர்கள் என்பதால், அவர்கள் குரலும் மெல்லிய அளவில் இருந்துள்ளது. இதனால், பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் அவர்களது சன்னமான குரல் கேட்கவில்லை.. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், அந்த வயது முதிர்ந்த, பார்வையற்ற தம்பதி அரை மயக்கத்தில் இருந்திருக்கிறார்கள்.. தற்போது உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உணவும், தண்ணீரும் தரப்பட்டுள்ளது.. இந்த தம்பதியின் மூத்த மகன், நகரில் மற்றொரு பக்கத்தில் வசித்து வருவதால், அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
முன்னதாக வீட்டுக்குள் நுழைந்து தம்பதிய மீட்ட போலீசார், அவர்களை குளிக்க வைத்து உணவும் தண்ணீரும் தந்தார்கள்.. இவர்களது மூத்த மகன் பிரதீப் சரூர்நகரில் வசித்து வருகிறாராம்.. 4 நாட்களாகவே இவர், பெற்றோருக்கோ, தன்னுடைய தம்பிக்கோ போன் செய்யாமல் இருந்திருக்கிறார்.. போலீசார்தான், தம்பி உயிரிழந்த விவரத்தை பிரதீப்புக்கு தெரியப்படுத்தினார்கள்.. இதையடுத்து, பிரதீப் விரைந்து வந்தபிறகு, அந்தத் தம்பதியை அவரது பராமரிப்பில் தற்போது ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications