கட்சிகளை வளைத்தது போல 'தெலுங்கானா காங்கிரஸ் ஆட்சி’யையே அலேக்காக தூக்கும் பாஜக? பிஆர்எஸ் பகீர்!
ஹைதராபாத்: அரசியல் கட்சிகள், எம்பி, எம்எல்ஏக்களை வளைத்து வரும் பாஜக தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியையே வளைத்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சியான கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி பகீர் குற்றம்சாட்டியிருக்கிறது.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலுங்கானா காங்கிரஸ் அரசின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.

தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியின் குஜராத் மாடல் அரசைப் புகழ்ந்து பேசினார். தமக்கு மூத்த சகோதரரைப் போன்றவர் பிரதமர் மோடி என்றார். காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை புகழ்ந்ததும் குஜராத் மாடல் குறித்து சிலாகித்துப் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விவாதங்களில், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் போல மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கையே ரேவந்த் ரெட்டி விரும்புகிறார்; இது தெலுங்கானா மாநிலத்தின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. காங்கிரஸ் கட்சிக்கு அப்பால் தெலுங்கானாவின் நலன் சார்ந்த முடிவு என்கின்றன ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளர்கள்.
ஆனால் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியோ வேறு விதமான விமர்சனத்தை முன்வைக்கிறது. அதாவது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விரைவில் மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா போல பாஜக பக்கம் சாய்ந்துவிடுவார். சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து முதல்வரானவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர்களது பாணியைத்தான் ரேவந்த் ரெட்டியும் பின்பற்றப் போகிறார் என்பதற்கான சமிக்ஞைதான் இது என கொளுத்திப் போட்டுள்ளது. இது தெலுங்கானா அரசியலில் பெரும் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ரேவந்த் ரெட்டியின் இந்த பாஜக மீதான திடீர் கரிசனம் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தையும் கதிகலங்க வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications