மசூதியை நோக்கி அம்பு.. சர்ச்சை சைகை காட்டிய ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! போலீஸ் வழக்குப்பதிவு
ஹைதராபாத்: ராம நவமி ஊர்வலத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போலச் சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு பாய்ந்துள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஆறு கட்ட வாக்குப்பதிவு இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

தெலுங்கனா: நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கிருந்து மொத்தம் 13 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல உள்ளனர். இந்த முறை அங்கே காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று டிரெண்டானது. அதில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா அங்கிருந்த மசூதியை நோக்கி அம்பு விடுவதைப் போலச் சைகை காட்டினார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. பலரும் அவரது செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூட சில குரல்கள் எழுந்தன.
வழக்குப்பதிவு: இதற்கிடையே லதா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 295A (மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பேகம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், "வரும் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் லதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே அவர் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில், கருத்து தெரிவித்து வருகிறார்.
குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த ஸ்ரீ ராம் நவமி ஊர்வலத்தின் போது, மாதவி லதா கற்பனையாக அம்பு ஒன்றை மசூதியை நோக்கி விடுவதைப் போலச் சைகை காட்டினார். இந்த கொடூரச் செயலை செய்யும் போது அவர் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது இந்த பொறுப்பற்ற செயல் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் லதா மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவைசி: இந்த வீடியோவுக்கு ஹைதராபாத் சிட்டிங் எம்பியும், மஜ்லீஸ் கட்சித் தலைவருமான ஒவைசியும் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், "பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தொடர்ந்து இது போல ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஹைதராபாத் அமைதிக்குச் சீர்குலைக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முயல்கிறது. ஹைதராபாத் மக்களைத் தவறாக வழிநடத்த நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது" என்றார்.
மன்னிப்பு: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று லதா விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியிருந்தார். அதாவது, "என்னைப் பற்றி நெகட்டிவாக இமேஜை உருவாக்க சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பரப்புகிறார்கள். அது முழு வீடியோ இல்லை. எடிட் செய்யப்பட்ட ஒன்று.. அத்தகைய வீடியோவால் கூட யாருடைய உணர்வும் புண்பட்டு இருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications