தொழிலில் நஷ்டம்.. 3 வயது மகள் வாயில் குங்குமம், மஞ்சளை அடைத்து பரிகாரத்தால் பலி.. தந்தை கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் தொழில் நஷ்டத்தை சரி செய்ய தனது 3 வயது மகளை வைத்து தந்தை பரிகார பூஜை செய்த போது அந்த குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் மாவட்டம் பேராரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு இரு மகள் உள்ளனர். அதில் இளைய மகளுக்கு 3 வயதாகிறது.
வேணுகோபால் செங்கல் சூளை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த தொழில் நன்றாக அவருக்கு கை கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தையே வேணுகோபால் சந்தித்து வருகிறாராம்.

ஜோதிடம்
ஜோதிடம், பூஜை புனஸ்காரம், பரிகார பூஜையில் அதிக நம்பிக்கை கொண்டவர் வேணுகோபால். இதனால் தீய சக்திகளின் ஆதிக்கத்தால்தான் தனது தொழிலில் நஷ்டம் அடைந்ததாக வேணுகோபால் கருதினாராம். மேலும் சனி கிரகம் எப்போதுமே கெடுதலையே கொடுக்கும் என அவ்வப்போது வீட்டில் கூறுவாராம்.

தீயசக்தி
இந்த நிலையில் தீய சக்தியை விரட்டி தொழில் நஷ்டத்தை எப்படி சரிசெய்வது என யோசித்தாராம். இதையடுத்து தனது 3 வயது இளைய மகளை வைத்து ஒரு பரிகார பூஜை நடத்த முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டு தோட்டத்தில் பூஜை நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

3 வயது சிறுமி
3 வயது சிறுமியின் கைகளை கட்டி அவர் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றினார். பின்னர் அந்த சிறுமியின் வாயில் குங்குமம், மஞ்சளை கொண்டு அடைத்துள்ளார். இதனால் அந்த சிறுமி மூச்சு திணரலால் அவதியடைந்தார். இதை பார்த்து அச்சமடைந்த அவரது மூத்த மகள் வீட்டை விட்டு ஓடி போய் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர்
இதையடுத்து அவர்கள் ஓடோடி வந்து அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுமியின் நிலை மோசமடைந்ததால் அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேணுகோபால் கைது
இதையடுத்து தந்தை வேணுகோபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் எந்த சாமியாரும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இந்த பூஜையை சுமார் 2 மணி நேரம் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications