ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம்.. ஆந்திராவில் இன்னொரு கோலார்! கோல்டு ரேட்டு குறையுமா? தெரிஞ்சிக்கோங்க
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தின் ஜோனகிரி பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கச் சுரங்கம், இந்தியாவின் முதல் பெரிய தங்க சுரங்கமாகும். இதில் ஆண்டுக்கு சுமார் 1,000 கிலோ அளவுக்கு தங்கத்தை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் தங்கம் உற்பத்தி அதிகரிப்பதால், விலை குறையுமா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சமீபத்தில் சிஐஐ இந்திய சுரங்க மாநாடு 2025 நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த டெக்கான் கோல்டு மைன்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஹனுமா பிரசாத், தங்கம் தோண்டி எடுக்கும் அளவை அதிகரிப்பது குறித்து கூறியிருக்கிறார்.

தங்க சுரங்கம்
ஜோனகிரி தங்கச் சுரங்கத் திட்டம், டெக்கான் கோல்டு மைன்ஸ் லிமிடெட் நிறுவனம் பங்குதாரராக உள்ள ஜியோமைசோர் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான அனுமதியை கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்நிறுவனம் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியுடன் மாநில அரசின் பிற முக்கிய அனுமதிகளும் விரைவில் கிடைக்க இருக்கின்றன.
ஆண்டுக்கு 1000 கிலோ தங்கம்
இது குறித்து பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "திட்டத்தின் உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆலை தொழில்நுட்பத்தை இறுதி செய்து வருகிறோம், மிக விரைவில் முழு உற்பத்தி தொடங்கும்" என்று தெரிவித்திருக்கிறார். முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், இந்தச் சுரங்கம் தொடக்க ஆண்டுகளில் 750 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியை 1,000 கிலோவாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி
இது ஆண்டுக்கு சுமார் 1.5 டன் உள்ள உள்நாட்டு தங்க உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும். "இந்தியாவின் தற்போதைய தங்க உற்பத்தி 1.5 டன். எங்கள் சுரங்கம் செயல்படத் தொடங்கியதும், கிட்டத்தட்ட ஒரு டன் தங்கம் கூடுதலாகச் சேரும்" என்று பிரசாத் கூறியிருக்கிறார். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால், தங்கம் இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறையக்கூடும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, இந்தியா ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது, இது நாட்டின் இரண்டாவது பெரிய இறக்குமதிப் பொருளாகும்.
தங்கம் தற்சார்பு
கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோனகிரி தங்க சுரங்கம், ஜோனகிரி, எர்ராகுடி மற்றும் பகதிஹை கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. ஜோனகிரி சுரங்கத்தின் தொடக்கம், இந்தியாவின் சுரங்கத் தொழிலுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகும். இது நாட்டின் கனிம வளங்களைப் பயன்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்புக்கான திறனை எடுத்துக்காட்டுகிறது. மேலும், அத்தியாவசிய வளங்களில் தற்சார்பை மேம்படுத்துவதற்கும், இறக்குமதிச் சுமையைக் குறைப்பதற்கும் இது உதவும்.
இத்திட்டம் முழு உற்பத்திக்கு நகரும்போது, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும். பிராந்திய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும், எதிர்கால தனியார் முதலீடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் என்னதான் உள்நாட்டில் தங்கம் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டாலும் அதன் விலை குறையாது என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications