கேஜிஎப்-2! ரியல் ராக்கி பாயாக மாறிய சிறுவன்! ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே மூச்சில் பிடித்ததால விபரீதம்
ஹைதராபாத்: கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட சிறுவன் அவரை போலவே ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே நேரத்தில் பிடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியானது கேஜிஎஃப்2. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இது ரூ 1000 கோடி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் படக்குழு தொடங்கவுள்ளது.

கேஜிஎஃப்2
இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு சிறுவன் பார்த்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள யாஷின் ராக்கி பாய் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட அவர் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே மூச்சில் பிடித்துள்ளார். இதனால் சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி ஏற்பட்டது.

சிகரெட்
மேலும் இருமலும் அதிகமாக இருந்ததால் பெற்றோர் அந்த சிறுவனிடம் விசாரித்த போது சிகரெட் பிடித்ததை கூறியுள்ளார். இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறார்.

அபாயகரமான செயல்
மீண்டும் இது போல் சிகரெட் பிடிக்காமல் இருக்கவும் மற்றவர்களிடம் ஈர்க்கப்பட்டு அபாயகரமான செயல்களை செய்யாமல் இருக்கவும் அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பதின்மர் பருவத்தில் இருக்கும் சிறுவர்கள் ராக்கி பாய் போன்ற கேரக்டர்களை அதிகம் விரும்புகிறார்கள்.

திரைப்படங்கள்
திரைப்படங்கள் நம் சமூகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அங்கமாகிவிட்டது. எனவே திரைப்படங்களை இயக்குபவர்கள், அதில் நடிப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை. சிகரெட் பிடிப்பது, புகையிலை உண்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கக் கூடாது. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பது என்பது தீர்வாகாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications