பாலஸ்தீனத்திற்கு ஆதரவு.. காங்கிரசின் பழக்கமே இதுதான்.. ஓவைசியையும் சேர்த்து அட்டாக் செய்த பாஜக
ஐதராபாத்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்றும் காங்கிரசும், ஓவைசியும் எப்போதுமே பிஎஃப்ஐ, ஹமாஸ் பயங்கரவாதிகள் பக்கம் தான் நிற்பார்கள் எனவும் பாஜக கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. ஹமாஸ் படையினர் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இதனால், இருபக்கமும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 1,600-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

காசா நகரை முழுமையாக முற்றுகையிடுவோம் என்று கூறிய இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் இஸ்ரேல்- பாலஸ்தீனத்தில் நிலவுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரத்தில் இந்தியா, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழு தாக்குதலை "பயங்கரவாத தாக்குதல்' என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்று கூறினார்.
பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு: ஆனால், இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலில் பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் காட்சி ஆதரவு தெரிவித்தது. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின்போது இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ள பாஜக, பயங்கரவாதிகள் பக்கம் நிற்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வேலை என்று சாடியுள்ளது.
பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய் குமார் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:- ஹமாஸை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் பாரதம் பல மோசமான பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது. எனவே இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
ராம ராஜ்யமாக இருக்கிறது: காங்கிரஸ் கட்சியும் ஓவைசியும் எப்போதுமே பிஎஃப்ஐ, ஹமாஸ் பயங்கரவாதிகள், ரோகிங்யாக்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இந்தியா ராம ராஜ்யமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மையும் காங்கிரசை கடுமையாக சாடினார்.
இது குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், "இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. ஹமாஸ் தற்போது தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு என்பதை காங்கிரஸ் கட்சி மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications