பரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா
ஹைதராபாத்: ஆந்திராவில் ஒருவர் பரம ஏழை. மாத வருமானம் 5000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அமராவதி நகரில் அவரின் சொத்து மதிப்பு மட்டும் 220 கோடி ரூபாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், ஆந்திர மாநிலத்தை அதிர வைத்துள்ளது இதுபோன்ற மோசடிகள்.
ஆச்சரியம்.. ஆனால் உண்மை என்பார்களே அப்படியும் சொல்லலாம். அல்லது விஞ்ஞான ஊழல் என்றும் இதைச் சொல்லலாம். எந்த பெயரிட்டு அழைத்தாலும் இதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது.
எப்படி இந்த தில்லுமுல்லு அரங்கேறியது? தெலுங்கு சினிமாக்களை மிஞ்சும் இந்த ட்விஸ்டுகளை எப்படி கண்டுபிடித்தனர்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அமராவதி
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவுக்கு ஒரு தலைநகரை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அமராவதி என்ற நகரம் இதற்காக தேர்வு செய்யப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தலைநகரம் என்றால் அங்கு சட்டசபை, உயர்நீதிமன்ற கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கியமான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் அல்லவா. இதற்காக 33 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.
ஜெகன் மோகன் ரெட்டி
இந்த நிலையில்தான், 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றதும் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரம் அமைக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அமராவதியில் சட்டசபை கட்டிடம் மட்டுமே அமையும் என்றும், பிற அனைத்து அரசு அலுவலகங்களும், விசாகப்பட்டினம் நகரத்துக்கு மாற்றப்படும் என்பதும் அவரது அறிவிப்பில் முக்கியமானது. உயர்நீதிமன்றம் கர்னூல் நகரில் அமையும்.
நில மோசடி
இந்த நிலையில்தான் அமராவதியில் நில மோசடி நடந்திருப்பதாக அரசுக்கு பொறிதட்டியது. இதையடுத்து சிஐடி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் வெள்ளை ரேஷன்கார்டு வைத்திருக்கும் பலரும் அமராவதியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வைத்திருப்பது தெரியவந்தது. வெள்ளை ரேஷன் கார்டு எனப்படுவது மாதத்திற்கு 5 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் பெறக்கூடிய ஏழைகளுக்காக வழங்கப்படக் கூடிய குடும்ப அட்டை ஆகும்.
ரூ.220 கோடி சொத்து
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், வெள்ளை ரேஷன் கார்டு வைத்துள்ளாராம் ஒரு நடுத்தர வயது ஆண். அவருக்கு சொந்தமாக 220 கோடி ரூபாய் செலவில் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்குக் காட்டியுள்ளார். இது அதிகாரிகளையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமராவதி பகுதியில் ஏகப்பட்ட சொத்து மாறுதல்கள் நடந்துள்ளனவாம். அது தொடர்பாக, கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமராவதி நகர் பகுதியில் சுமார் 797 வெள்ளை ரேஷன் கார்டுதாரர்கள், 761 ஏக்கர் பரப்பிலான நிலப்பரப்பை வாங்கியுள்ளனர். 529 பேரிடம் பான் கார்டு கூட கிடையாது.
3 தலைநகரம்
இவர்கள் பெரும் பணக்காரர்களின் அல்லது அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அமராவதி நகரம் தலைநகரம் அந்தஸ்து பெறும் போது, அங்கு நிலத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்பதால், பினாமி பெயரில் நிலங்களை வாங்கி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இப்போது ஆந்திராவை உலுக்கி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி, 3 தலைநகரம் திட்டத்தை கொண்டு வந்ததால், அமராவதிநகருக்கு, இருந்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. எனவே அங்கு நிலத்தின் விலை வீழ்ச்சியடைந்து விட்டது.
போராட்டம்
மற்றொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசம் கட்சியினர், அமராவதியைத்தான் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெளியாகியுள்ள நில மோசடி தொடர்பான தகவல்கள், சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நில மோசடியில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு தொடர்பு இருப்பதால்தான், அமராவதியை தலைநகராக்க வேண்டும் என பிடிவாதம் காட்டுவதாக ரெட்டி தரப்பில் பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது.