படுக்கைக்கு அருகே செல்போன் சார்ஜ் போடுறீங்களா.. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. 23 வயது இளைஞர் பலி
ஹைதராபாத்: மொபைல் சார்ஜர் ஒயர் பட்டதில் தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுத்துக் கொண்டே செல்போன் யூஸ் செய்ய ஏதுவாக அவர் மின்சார ஓயரை நீட்டித்து வைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அது உடலில் படவே அந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இந்த காலத்தில் செல்போன் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் எங்குமே செல்ல முடியாது என்ற அளவுக்கு அது நம்முடன் பின்னிப் பிணைந்துவிட்டது.

அதேநேரம் செல்போனை நாம் அலட்சியமாக அல்லது அபாயகரமான வகையில் பயன்படுத்துவதால் சில நேரம் மோசமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான விபத்து தான் இப்போது நடந்துள்ளது.
சார்ஜ் போடும் போது உயிரிழப்பு: தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞன், நம் அனைவரையும் போலவே தனது படுக்கைக்கு அருகில் மொபைல் ஃபோனை சார்ஜ் போட்டுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 25ம் தேதி அன்று நடந்துள்ளது. உயிரிழந்த அந்த நபர் மாலோத் அனில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுவாக சார்ஜ் போடும் போது எல்லாம் உயிரிழப்புகள் நடக்காது. சார்ஜ் ஒயரில் இருந்து மின்சாரம் லீக் ஆகாது என்பதால் பலருக்கும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பதில் குழப்பமே இருந்தது. இதற்கிடையே போலீசார் விசாரணையில் சில ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
எதனால் விபத்து: அதாவது அனில் படுக்கைக்கும் பிளக் பாயிண்டிற்கும் இடையே சற்று தூரம் இருந்துள்ளது. இதனால் மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு, படுத்துக் கொண்டே செல்போனை யூஸ் செய்ய அவரால் முடியவில்லை. இதனால் தனது மொபைலை சார்ஜ் செய்ய ஏதுவாக மின்சார ஓயரை தனது படுக்கை அருகே வரும்படி அவர் நீட்டித்துள்ளார்.
அதாவது மின்சாரம் பாயும் லைவ் ஓயர், ஸ்விட்ச் உட்பட எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் படுக்கை வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதைச் செய்துவிட்டு அப்படியே அவர் தூங்கிவிட்டார். தூக்கத்தில் அவர் திரும்பிப் படுக்கவே அந்த ஓயர் மீது அவரது உடல் பட்டுள்ளது.
சிகிச்சை பலனில்லை: இதனால் அவருக்கு ஷாக் அடித்த நிலையில், வலியால் அலறி இருக்கிறார். இதையடுத்து அனில் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்குத் திருணமாகி மனைவியும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர்.
கர்நாடக இளைஞர்: கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு பெங்களூரில் 24 வயது இளைஞன் ஒருவர் தனது செல்போனை சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. உயிரிழந்த நபர் ஸ்ரீனிவாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பிளக் பாயிண்டில் ஏற்கனவே பிரச்சினை இருந்து இருக்கிறது. ஸ்ரீனிவாஸ் ஈரக்கைகளுடன் செல்போனை சார்ஜ் போட போகவே அப்போது மின்சாரம் பாய்ந்து அந்த நபர் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications