பதறிய பிரதமர்.. டவர் ஏறி மிரட்டிய பெண்ணால் பரபரப்பு! மேடையிலேயே மோடி செய்த சம்பவம்.. பரபரப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் மின்விளக்குகளுக்கான டவரில் ஏறி மிரட்டல் விடுத்த நிலையில் மேடையில் இருந்த பிரதமர் மோடி பதறினார். அதன்பிறகு அவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் மூலம் மாநிலத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சியான முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி விரும்புகிறது. அதேவேளையில் தெலங்கானாவில் வெற்றி பெறும் நோக்கத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்தனியே களமிறங்கி உள்ளன.
இந்நிலையில் தான் தெலங்கானா தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுக்கூட்டத்தில் பேசினார். கடந்த 7 ம் தேதி முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய நிலையில் இன்று 2வது முறையாக பேசினார். தெலங்கானாவில் உள்ள தலித் மக்களில் 60 சதவீதம் பேர் மடிகா பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் மடிகா மக்களுக்கான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகளை விமர்சனம் செய்தார். அப்போது திடீரென்று பெண் ஒருவர் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும் டவர் மீது ஏறினார். தனது பிரச்சனையை யாரும் தீர்க்கவில்லை. தனது பிரச்சனையை தீர்த்தால் மட்டுமே டவரில் இருந்து கீழே இறங்குவேன் என மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதை மேடையில் பேசிய பிரதமர் மோடி கவனித்ததோடு பதறிப்போனார். உடனடியாக மேடையில் இருந்த இருந்தபடியே மைக்கில் அந்த பெண்ணிடம் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‛‛கீழே இறங்குங்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அங்கு வயர்கள் தாறுமாறாக உள்ளன. ஷார்ட் சர்க்குட் ஏற்படலாம். இப்படி செய்வதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் இல்லை. நான் உங்களுக்காக வருகிறேன். நான் உங்களின் கோரிக்கையை கேட்கிறேன்'' என பரபரப்பான டோனில் கெஞ்சும் வகையில் கூறினார்.
இதையடுத்து அந்த பெண் மின்விளக்குக்கான டவரில் இருந்து இறங்கி கீழே வந்தார். அவரை போலீசார் அழைத்து சென்றனர். பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் மின்விளக்குகளுக்கான டவரில் ஏறியதும், அவரிடம் பிரதமர் மோடி இறங்கும்படி கோரிக்கை வைத்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications