'மோடியை குஷிப்படுத்த பொய் சொல்லாதீங்க பவன் கல்யாண்'.. நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி
ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தோல்வி குறித்து கூறிய பவன் கல்யாண், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியை குஷிப்படுத்துவதற்காக மட்டுமே மக்களிடம் பொய் சொல்வதை தயவுசெய்து நிறுத்துங்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதை இப்போதும் நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் தோற்றுப்போனது.. இதுபற்றி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த ஆந்திரப்பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், "இந்தியாவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.

பாரதத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் உருமாற்ற சீர்திருத்தங்களை ஆதரிக்கும் எண்ணம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்பதை அவர்களின் இந்த நிலைப்பாடு தெளிவுபடுத்துகிறது.
மீண்டும் தள்ளிப்போட்டிருக்கிறார்கள்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க மறுப்பதன் மூலம், அவர்கள் மீண்டும் ஒருமுறை தேசிய முன்னேற்றத்தை விட அரசியல் கணக்குகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர்; இதன் மூலம் உள்ளடக்கிய ஆட்சிமுறை மற்றும் பாலின நீதி நோக்கிய நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையை மீண்டும் தள்ளிப்போட்டுள்ளனர். இந்த மைல்கல் சீர்திருத்தத்தை ஆதரித்திருப்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் ஜனநாயக விழுமியங்களை ஆழப்படுத்துவதிலும் நமக்கிருக்கும் கூட்டு அர்ப்பணிப்பை நிரூபித்திருக்கும்.
பவன் கல்யாண் நம்பிக்கை
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக, இந்த முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமைத்துவத்தை ஜனசேனா கட்சி மனதார வரவேற்றுப் பாராட்டுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், அது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்குப் பெருமை மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக அமைந்திருக்கும். வரும் நாட்களில், இந்தியாவின் சட்டமன்ற நிறுவனங்களில் பெண்கள் தங்களுக்குரிய வலுவான இடத்தைப் பிடிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" இவ்வாறு பவன் கல்யாண் கூறியிருந்தார்
பிரகாஷ் ராஜ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், " பிரதமர் மோடியை குஷிப்படுத்துவற்காக மட்டுமே பொதுமக்களிடம் பொய் சொல்வதை தயவுசெய்து நிறுத்துங்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதை இப்போதும் நிறைவேற்ற முடியும்.
ஆந்திராவை பலவீனப்படுத்தும்
ஆனால், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தக்கூடிய 'தொகுதி மறுவரையறை மசோதாவை' (Delimitation Bill) நிறைவேற்றவே உங்கள் கும்பல் விரும்பியது. உங்களை துணை முதல்வராக ஆக்கிய ஆந்திர மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமைகளையும் விலை பேச வேண்டாம் என்று உங்களைக் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இதை விளக்கிக்கூற, உங்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா?" என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.














Click it and Unblock the Notifications