‛பாஜகவுக்கு முட்டை’.. தெலங்கானா 13 தொகுதிகளை அள்ளும் காங்கிரஸ்! லோக்சபா தேர்தலில் தாமரைக்கு ஷாக்
ஹைதராபாத்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது தெலங்கானா மாநிலத்தின் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெடரல்-புதிய தலைமுறை-ஏபிடி, இந்த கருத்துக்கணிப்புகளை நடத்தியிருந்தது. அதன்படி எதிர் வரும் லோக்சபா தேர்தலில், தெலங்கானாவில் பாஜக ஒரே ஒரு தொகுதியை கூட வெல்லாது என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு பாஜக 4 இடங்களை கைப்பற்றி 19.45% வாக்குகளை பெற்றிருந்தது. இந்த வாக்கு சதவிகிதம் இந்த முறை அப்படியே 16.78ஆக சரியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸை பொறுத்த அளவில் கடந்த முறை 29.48 சதவிகித வாக்குகளுடன் 3 எம்பி தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை வாக்கு சதவிகிதம் 42.50 சதவிகிதமாக உயர்ந்து, மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 13 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 4 தொகுதிகளில் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், அதன் வாக்கு வங்கி 44.52 சதவிகிதத்தில் இருந்து 32.62 சதவிகிதமாகக் குறையும் என்றும் ஃபெடரல்-புதிய தலைமுறை கருத்துத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை பிஆர்எஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது.
இந்த அளவு மாற்றத்திற்கான காரணம், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் தோற்கடித்திருந்தது. வாக்கு விகிதத்தில் காங்கிரஸ் 39.40 சதவிகிதமும், பிஆர்எஸ் கட்சி 37.35 சதவிகிதமும் பெற்றிருந்தது. ஆனால் பாஜகவுக்கு 13.90 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்த வெற்றி லோக்சபா தேர்தலிலும் பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆந்திராவை பொறுத்த அளவில், இந்த கருத்துக்கணிப்புகள் அப்படியே தலைகீழ் மாற்றம் அடைந்திருக்கிறது. அதாவது ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 32.81 சதவிகித வாக்குகளுடன் 13 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 31.49 சதவிகித வாக்குகளுடன் 11 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த அளவில் 11.70 சதவிகித வாக்குகளுடன் 1 தொகுதியை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 5.72 சதவிகித வாக்குகளை பெற்றாலும் எந்த தொகுதியையும் கைப்பற்றாது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications