இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி60.. ஒரே ராக்கெட்டில் 2 விண்கலன்கள்.. சாதிக்கும் இஸ்ரோ
ஹைதராபாத்: ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பெடேக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் வாயிலாக இன்று விண்ணில் ஏவப்படுகிறது. கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் உலகமே வியக்கும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இன்று விண்ணில் ஏவப்படுகிறது
இதற்கான இறுதிக்கட்டப் பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. முதலில் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10.00 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
சோம்நாத் கூறுகையில், ”அதே சுற்று வட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருக்கிறது. இதன் காரணமாக செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையல்ல.. ஏற்கனவே, இதுபோன்று பலமுறை இப்படி கடைசி நேரத்தில் விண்ணில் ஏவப்படும் நிகழ்வானது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்வெளி டிராபிக் என்று சொல்லப்படும் இதுபோன்ற காரணங்களால் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட்கள் இன்று குறுக்கிடுவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனாலேயே 2 நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
4-வது நாடு என்ற பெருமை
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'SpaDeX' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணையச் செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications