அல்லு அர்ஜூன் குற்றவாளி தான்.. ‛புஷ்பா 2' கூட்ட நெரிசலில் பெண் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகை! முழுவிவரம்
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் பலியான நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் நடிகர் அல்லு அர்ஜூனின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. முன்னதாக டிசம்பர் 4ம் தேதி இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளியில் அமைந்து இருக்கும் சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது.

இதனை பார்க்க இரவு 9.30 மணிக்கு அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் பலியானார். அவரது 13 வயது மகன் ஸ்ரீ படுகாயமடைந்தார். ஸ்ரீ மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கு நம்பள்ளியில் உள்ள 9வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் மொத்தம் 23 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அல்லு அர்ஜூனின் பெயரும் அல்லு அர்ஜூனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரது பெயர் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.அதேபோல் சம்பவம் நிகழ்ந்த சந்தியா தியேட்டர் நிர்வாகம் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா 2 படக்குழுவினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் தான் ரசிகர்கள் போட்டி போட்டு அவரை பார்க்க முயன்றனர். இது தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த துயர சம்பவத்தின் தொடக்கப்புள்ளி அல்லு அர்ஜூனின் வருகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்ஜனார் உறுதி செய்துள்ளார். இதனால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி இந்த குற்றப்பத்திரிகையின் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் முடிவில் தண்டனைகள் அறிவிக்கப்படும். இதனால் இந்த குற்றப்பத்திரிகை என்பது நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications