இதென்ன புது ரகமாக இறக்கும் அமித்ஷா.. கேசிஆர்- ராகுல் இடையே இப்படி ஒரு 'கொல்லைப்புற' கூட்டணியாமே?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கேசிஆரை முதல்வராக்கவும் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்கவும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.
தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தேர்தல் களத்தில் காங்கிரஸ், ஆளும் பிஆர்எஸ் கட்சிகள் மட்டுமின்றி பாஜகவும் சரமாரியாக வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன.

ஆனால் தெலுங்கானா தேர்தல் தொடர்பான தற்போதுவரையிலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றக் கூடும் எனவும் பாஜகவுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று வெளியிடப்பட்ட சவுத் ஃபர்ஸ் தேர்தல் கருத்து கணிப்பில் கூட காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 3 முதல் 6 இடங்கள்தான் கிடைக்கும் எனவும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தெலுங்கானாவின் மக்தல்லில் தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே ரகசிய உடன்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பிஆர்எஸ் கட்சியின் கேசிஆரை மீண்டும் முதல்வராக்க காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல ராகுல் காந்தியை பிரதமராக்க பிஆர்எஸ் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி என்பது சீனா பொருட்கள் மாதிரி. எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. ஆகையால் காங்கிரஸ் கட்சி எந்த சூழ்நிலையிலும் பிஆர்எஸ் கட்சியுடன் கை கோர்க்கும்.
பாஜகவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒருவரை தெலுங்கானா முதல்வராக்குவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளது. தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தால் மாதிகா (மதிகா) ஜாதியினருக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு இலவச யாத்திரை செல்வதற்கும் பாஜக அரசு ஏற்பாடுகள் செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தெலுங்கானாவில் பிஆர்ஸ், பாஜக, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவை மறைமுக கூட்டணி அமைத்துள்ளன; பாஜகவின் பி டீம்தான் பிஆர்எஸ் கட்சி என்பது காங்கிரஸின் பிரசாரம். பிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் மீது மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; பிஆர்எஸ்- பாஜக ரகசிய கூட்டுதான் இதற்கு காரணம் என பாஜகவில் விருந்து விலகிய நடிகை விஜயசாந்தியும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications