தெலுங்கானா புரட்சி.. கேசிஆர் கட்சி 12 மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகராவின் ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 12 பேர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்முறை தெலுங்கானாவில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டுகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மொத்தம் 12 பேர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் 12 பேரும் காங்கிரஸில் இணைந்தனர். பிஆர்எஸ் கட்சி முன்னாள் எம்பி பொங்குலேதி சீனிவாச ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடேஸ்வரலூ, கோரம் கனகையா, கோடா ராம் பாபு, எம்.எல்.சி நரசா ரெட்டியின் மகன் ராகேஷ் ரெட்டி உள்ளிட்டோர் காங்கிரஸில் இணைந்தவர்கள்.
பாட்னா சந்திப்பு: பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிஆர்எஸ் கட்சி அழைக்கப்படவில்லை. மேலும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை பிஆர்எஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. குறிப்பாக காங்கிரஸை மிகவும் காட்டமாக பிஆர்எஸ் கட்சி விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் பாட்னா கூட்டம் முடிவடைந்த சில நாட்களிலேயே பிஆர்எஸ் கட்சியின் மாஜி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் அலேக்காக அள்ளியிருப்பது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் ஏற்கனவே ஒய்எஸ் ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர்டிபி கட்சியை காங்கிரஸ் கட்சி இணைத்துக் கொள்ள இருக்கிறது. ஆனால் ஷர்மிளா, ஆந்திராவில் அரசியல் செய்யட்டும்; தெலுங்கானா அரசியலில் இறங்க கூடாது என காங்கிரஸ் கட்சியிலேயே கலகக் குரல் எழுப்புகின்றனர். இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சி மாஜி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை காங்கிரஸ் வளைத்துப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications