நெருங்கிய தெலுங்கானா தேர்தல்! பரிவாரங்களுடன் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தெலுங்கானா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டது. தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற பாஜக கனவில், காங்கிரஸின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளன. தேர்தல் கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றக் கூடும் என தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானாவுக்கு பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 2.15 மணியளவில், மகபூப்நகர் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாக்பூர் - விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான முக்கிய சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், '37 கி.மீ. நீளமுள்ள ஜக்லெய்ர் - கிருஷ்ணா புதிய ரயில் பாதையை' பிரதமர் அர்ப்பணிப்பார். ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த புதிய ரயில் பாதை பிரிவு பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக ரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது. கிருஷ்ணா ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) - ராய்ச்சூர் - ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

'ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி பைப்லைன் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ.2170 கோடி செலவில் கட்டப்பட்ட எல்பிஜி குழாய் திட்டம், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லபள்ளி (ஹைதராபாத்தின் புறநகர்) வரை, இப்பகுதியில் எல்பிஜி போக்குவரத்து மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை வழங்குகிறது. கிருஷ்ணப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) மல்டி-ப்ராடக்ட் பெட்ரோலியம் பைப்லைனுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1940 கோடி செலவில் 425 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படும். இந்த பைப்லைன் பிராந்தியத்தில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்ரோலிய பொருட்களை வழங்கும்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்தார். ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை; மேலாண்மை ஆய்வுகள் துறை; விரிவுரை அரங்க வளாகம் - III; மற்றும் சரோஜினி நாயுடு கலை மற்றும் தொடர்பியல் துறை (இணைப்பு) ஆகியவை இதில் அடங்கும்.












Click it and Unblock the Notifications