தெலுங்கானா: கமரெட்டியில் கேசிஆரை எதிர்த்து மாநில காங். தலைவர் ரேவந்த் ரெட்டி- காங். அதிரடி அறிவிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான கே.சந்திரசேகர ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் கஜ்வெல் ஏற்கனவே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்ற தொகுதி. கமரெட்டி தொகுதி, கே.சந்திரசேகர ராவின் பூர்வீக மாவட்டம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று இரவு தெலுங்கானா தேர்தலுக்கான 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியும் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே கோடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.

தற்போது மேலும் ஒரு தொகுதியாக கமரெட்டியிலும் ரேவந்த் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் கமரெட்டி தொகுதியில்தான் காங்கிரஸ் வேட்பாளராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கமரெட்டி தொகுதியில் 2018-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிஆர்எஸ் கட்சியின் கம்பா கோவர்தன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அத் தேர்தலில் காங்கிரஸின் முகமது அலி சபீரை விட வெறும் 4,557 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கம்பா கோவர்தன் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் பாஜக 15,439 வாக்குகளையும் சிறிய கட்சியான சமாஜ்வாதி பார்வார்டு பிளாக் 10,537 வாக்குகளையும் பெற்றிருந்தது.
கமரெட்டி தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய முகமது அலி சபீர், இம்முறை நிஜாமாபாத் அர்பன் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications