தெலுங்கானாவில் சினிமாவை விஞ்சும் சம்பவம்! பட்டப்பகலில் நகை கடையில் துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சினிமாவை விஞ்சும் வகையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையை தடுக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் பட்டப்பகலில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இருக்கும் நகைக்கடையில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

துப்பாக்கியுடன் புகுந்த நபர்கள் கடையில் உள்ள ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகள் போல பிடித்து வைத்து ரேக்குகளில் உள்ள நகைககளை அள்ளி சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க முயன்ற ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்களை முயற்சியை தடுக்க முயன்றவர்களை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் கடை ஊழியர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் படுகாயத்துடன் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானாவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற நகைக்கடைக்கு மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜோதிநகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு சென்ற அமைச்சர் நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஊழியர்களிடம் கொள்ளை சம்பவம் பற்றி விசாரித்தார். உள்ளூர் போலீசார் மற்றும் நகர காவல் ஆணையரும் அப்போது உடன் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது:- தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற ஊழியர்களின் செயல் பாராட்டுக்குரியது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் எல்லா கோணங்களிலும் தீவிர முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications