கதையே மாறுது! ‘கை’ காட்டிய முஸ்லீம் கூட்டமைப்பு.. இஸ்லாமிய வாக்குகளை வாரி சுருட்டும் காங்கிரஸ்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு, இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்கள் வாக்கு பலத்தை காட்ட வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகளின் ஜேஏசி வேண்டுகோள் விடுத்துள்ளது.
119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாரதிய ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பி.ஆர்.எஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.

அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி இறைத்துள்ளன. தெலுங்கானாவில் கடந்த ஜூலை மாதம் இஸ்லாமியச் சமூகத்தின் 40 முக்கிய பிரதிநிதிகள் ஒன்று கூடி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முஸ்லீம் பிரகடனம் 2023 என்ற தலைப்பில் இந்த அந்த கோரிக்கைகளில் முக்கியமானது முஸ்லீம்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் 10-12 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும்.
தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது முதலே கடந்த 9 ஆண்டுகளாக முஸ்லீம் இட ஒதுக்கீடு குறித்து அங்கு விவாதம் நடந்து வருகிறது. கடந்த 2014இல் தெலுங்கானா ஷாத்நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்களிடையே பேசிய சந்திரசேகர் ராவ், "காங்கிரஸும் தெலுங்கு தேசம் கட்சியும் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், 12 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் அமல்படுத்துவோம்" என்று பேசியிருந்தார்.

ஆனால், 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கேசிஆர், முஸ்லீம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை என முஸ்லீம்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 2017ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த தேர்தல் வாக்குறுதியிலும், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பி.ஆர்.எஸ் கட்சி குறிப்பிடவில்லை. இதனால், கேசிஆர் மீது அதிருப்தியில் உள்ள முஸ்லீம் கூட்டமைப்பினர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஆர்எஸ் தேர்தல் அறிக்கை, தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறியதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகளுக்கு கேசிஆர் செவிசாய்க்கவில்லை என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் சூறாவளியில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் கவனிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முஸ்லிம் ஜேஏசி பிரகடனத்தின் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நோக்கங்களை கவனமாக மதிப்பீடு செய்வதில் காங்கிரஸ் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது, முஸ்லிம் ஜேஏசி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு முக்கிய கோரிக்கைகளை காங்கிரஸ் சிறுபான்மை பிரகடனத்தில் இணைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்த பிறகு, தெலுங்கானா முஸ்லிம் அமைப்புகளின் மாநிலக் குழுவான ஜேஏசி சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களித்து தங்கள் வாக்கு பலத்தை காட்ட வேண்டும் என்று ஜேஏசி வேண்டுகோள் விடுத்துள்ளது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முஸ்லீம் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது பி.ஆர்.எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முன்னதாக, தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திமுகவினர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்தியா கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திமுக கட்சியின் அனைத்து பிரிவுகளும், தொண்டர்களும் பாடுபட வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications