பெரிய சிக்கல்! பாஜக டாப் தலைவர் பிஎல்.சந்தோஷுக்கு பறந்த பரபர சம்மன்! தெலங்கானாவில் பெரிய ஆக்ஷன்
ஹைதராபாத்: தெலங்கானாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகாரில் விசாரணை இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று உள்ளது.
தெலங்கானாவில் இப்போது கேசி சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு அடுத்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் அங்கு ரொம்பவே வீக்காக இருக்கும் நிலையில், வலுவான எதிர்க்கட்சி யாரும் இல்லை. அந்த இடத்தை நிரப்ப பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேசிஆர்
இதற்கிடையே கடந்த மாதம் தான் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயல்வதாகவும் இதற்காக டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பெரிய தொகை விலை பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் கேசிஆர் சில வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். மேலும், இதில் இடைத்தரகர்கள் என்று கூறி சிலர் கைது செய்யப்பட்டனர்.
பிஎல் சந்தோஷ்
மொத்தம் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை இப்படி விலைக்கு வாங்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த தெலங்கானா போலீசார் தலைமையில் தனியாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க இப்போது பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷுக்கு தெலுங்கானா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் நவம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சம்மன்
அப்படி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்பட்டுவார் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது. சமீபத்தில் தான் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா போலீசார் விசாரிக்கத் தடை கோரும் மனு அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தெலங்கானா போலீசார் வழக்கை விசாரிக்கத் தடை விதித்த நீதிமன்றம், இருப்பினும், இந்த விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது.
முக்கியம்
இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூவரும் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு கட்சி மாற ரூ 100 கோடியை வழங்குவதாகப் பேரம் பேசியதாகப் புகார்கள் உள்ளன. இந்த சம்பவம் தேசிய அளவிலும் கூட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தான் பிஎல் சந்தோஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பரபர வீடியோ
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கேசிஆர், பேரம் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக அவர் சாடினார். தெலங்கானா மட்டுமின்றி மேற்கு வங்கம், டெல்லி உட்பட 4 மாநிலங்களில் மாநில அரசைக் கவிழ்க்கச் சதி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரகசிய கேமரா
இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியாவை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் டிஆர்எஸ் கட்சியினரே போலியாக இதுபோன்ற வீடியோக்களை எடுத்து புகார் கூறுவதாகவும் தெரிவித்து உள்ளது.