அநியாயம்! தமிழ்நாட்டில் கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு..தெலுங்கானாவில் பிரதமர் மோடி பரபர பேச்சு
ஐதராபாத்: தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்றும் ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம் என்றும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தெலுங்கானாவில் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர் ராவ், ஹாட்ரிக் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். அதேவேளையில், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் கொதிக்க ஆரம்பித்து உள்ளது. தேர்தல் பிரசாரத்தை பல வாரங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கி விட்டன. அந்த வகையில், இன்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தெலுங்கனா மாநில அரசையும் முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து தமிழ்நட்டு கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், "தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம்.
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை. கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோவில்களை விடுவிக்குமா? இவ்வாறு மோடி பேசினார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனதானம் தொடர்பான பேச்சை கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்து இருந்த நிலையில், தற்போது தெலுங்கானா பொதுக்கூட்டத்திலும் கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது குறித்து சாடியுள்ளார். முன்னதாக சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
சனாதன தர்மத்தை ஒழித்தாக வேண்டும் என தீர்மானத்துடன் இருக்கிறது "இந்தியா" கூட்டணி. சனாதன தர்ம அழிப்பு: இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சனாதன தர்மம்தான் சுவாமி விவேகானந்தருக்கும் திலகருக்கும் உத்வேகம் தந்தது. "இந்தியா" கூட்டணியானது சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகிறது.
தற்போது சனாதன தர்மத்தின் மீது பகிரங்கமாகவே குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது "இந்தியா" கூட்டணி. நாளை நம் மீதான தாக்குதல்களை "இந்தியா" கூட்டணி அதிகரிக்கக் கூடும். இந்த தேசத்தை நேசிக்கக் கூடிய நாட்டில் உள்ள அத்தனை சனாதனிகளும் இத்தகையவர்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு சனாதனியும் "இந்தியா" கூட்டணிக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications