ஹைதராபாத் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன்.. என்ன நடக்கிறது.. குவியும் ஏராளமான ரசிகர்கள்
ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்பட சிறப்புக் காட்சியின் போது நடந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் அங்குள்ள சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தகவலை அறிந்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது . இப்படத்தின் சிறப்புக் காட்சி படம் வெளியாவதற்கு முதல் நாளான டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது.

அப்போது அந்த சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தாருடன் வருகை வந்தார். இதேபோல் புஷ்பா 2 படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் புகாரின் பேரில் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பள்ளி காவல் நிலையம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்கை பராமரிக்கவும் போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே அல்லு அர்ஜுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி நடிகர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணையும் இப்போது தொடங்கி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications