திமுகவை சீண்டும் வகையில் வன்னி அரசு போட்ட பதிவு.. என்னவாம்? டக்கென தலையைத் திருப்பும் திமுக!
சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில், சிறிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தேர்தலை நோக்கி திமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வரும் நிலையில், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு புயலைக் கிளப்பியுள்ளது.
வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், “வழி காட்டும் தெலுங்கானா! தெலங்கானா துணை முதல்வர் காங்கிரஸ் மூத்த தலைவர் பட்டி விக்ரமர்கா மல்லு, தலித் சமூகத்தை சேர்ந்த மாலா பிரிவைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தலித்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளை பார்த்தாலே சமூக நீதி பார்வை புலப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தெலுங்கானா காங்கிரஸ் அரசை பாராட்டி, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக பலரும் கூறியுள்ளனர். திமுக அரசில் 3 அமைச்சர்கள் மட்டுமே தலித்கள். அவர்களுக்கும் முக்கிய துறைகள் வழங்கப்படாததை சுட்டிக்காட்டும் விதமாகவே வன்னி அரசு இப்படி பதிவிட்டுள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
#வழி_காட்டும்_தெலுங்கானா
— வன்னி அரசு (@VanniKural) December 10, 2023
தெலங்கானா துணை முதல்வர் காங்கிரஸ் மூத்த தலைவர் பட்டி விக்ரமர்கா மல்லு -
தலித் சமூகத்தை சேர்ந்த மாலா பிரிவினர்.
தற்போது அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
தலித்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளை பார்த்தாலே
சமூக நீதி பார்வை புலப்படும்.… pic.twitter.com/vB4SOfLlk8
கடந்த லோக்சபா தேர்தலில் விசிகவுக்கு 2 சீட்களை வழங்கியது திமுக. அதில் ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். கி.ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலிலும் விசிகவுக்கு திமுக கூட்டணியில் 2 சீட் வழங்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், வன்னி அரசு திமுகவை விமர்சிப்பது போல பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வன்னியரசு மற்றொரு பதிவில், “இரு பழங்குடி பெண் ஆளுமைகள் குறித்து இங்கே ஒப்பிடலாம். ஒருவர் சனாதனத்தை நிலை நிறுத்த சனாதனக் கும்பலால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் திரெளபதி முர்மு அவர்கள். இன்னொருவர் சமத்துவத்தை நிலை நிறுத்த சட்டப்பேரவை உறுப்பினராக தெலுங்கானா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பழங்குடி நல்வாழ்வுத்துறை அமைச்சராக அமர்த்தப்பட்டுள்ளார். அவர் பெயர் சீதாக்கா.
இருவருமே பழங்குடி பெண்கள் தான். மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தி படுகொலை செய்யப்பட்ட போது சீதாக்கா தெருவில் நின்று போராடினார். திரவுபதி முர்முவோ சிறு முனகல் கூட இல்லாமல் கள்ள மவுனம் காத்தார். இருவருமே பழங்குடி பெண்கள் தான். ஒருவர் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர். மற்றொருவர் சனாதனத்துக்கு எதிராக களமாடுபவர். எப்போதுமே மக்கள் செல்வாக்கு சனாதனத்துக்கு எதிராக களமாடுபவருக்கே என்பதை சீதாக்கா நிறுவியிருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications