பிரதமர் மோடி படம் எங்கே? ரேஷன் கடை ஆய்வில் கலெக்டரை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்! பரபர தெலுங்கானா
ஐதரபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரேஷன் கடையில் ஆய்வு நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததால் அவர் கோபமடைந்தார். பிரதமர் மோடி படம் எங்கே?, ரேஷன் அரசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? என கேள்வி கேட்டு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
தெலுங்கானா மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி பாஜக அந்த மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போது ஆட்சி செய்யும் முதல்வர் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை தோற்கடிக்க வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கான மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று 2வது நாளாக இன்று பாஜக நாடாளுமன்ற பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.
நிர்மலா சீதாராமனுக்கு கடும் எதிர்ப்பு! கார் தடுத்து நிறுத்தம்! பாஜக-காங்கிரஸ் மோதல்! பரபர ஐதராபாத்
பிரதமர் மோடி படம் எங்கே?
அப்போது காமரெட்டி மாவட்டம் பான்ஸ்டாவில் உள்ள பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லை. இதனால் அவர் கோபமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை? என அவர் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் பதிலளிக்கவில்லை. மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது. இதில் பெரும்பங்கை மத்திய அரசு வகிக்கிறது. இப்படி இருக்கும்போது பிரதமரின் படத்தை வைக்க உங்களுக்கு ஏன் ஆட்சேபனை?'' என கேள்வி எழுப்பினார்.
அரைமணிநேரத்தில் உத்தரவு
இதனால் காமரெட்டி மாவட்ட கலெ க்டரரை ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் நிர்மலா சீதாராமன் கோபத்தை கொப்பளிக்கும் வகையில் அரை மணி நேரத்தில் இதுதொடர்பான விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தெலுங்கானா நிதி அமைச்சர் எதிர்ப்பு
இதற்கு தெலுங்கானா மாநிலத்தின் நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛ரேஷன் கடைகளில் மோடியின் படத்துடன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது. இது நகைச்சுவையானது. தேசிய உணவு விதிகளின் கீழ் 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலான ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரேஷன் அரிசு வழங்குகிறது. மீதமுள்ள 45 சதவீத கார்டுதாரர்களுக்கு தெலுங்கானா அரசு செலவில் ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக நாங்கள் முதல்வரின் படத்தை வைக்கிறோமா?'' என கேள்வி எழுப்பினார்.
கார் முற்றுகை போராட்டம்
முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காமரெட்டி மாவட்டத்தில் ஆய்வுக்கு சென் நிர்மலா சீதாமனின் வாகனத்தை மறித்து முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர். இதுதொடர்பாக பாஜக-காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.