"மொத்தமாக மாறும் தெலுங்கானா.." கேசிஆர் மீது இஸ்லாமியர்கள் பயங்கர கோபம்.. என்னாச்சு! அப்படியே மாறுதே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு என்பது அங்கே மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
தெலுங்கானாவில் கடந்த ஜூலை மாதம் இஸ்லாமியச் சமூகத்தின் 40 முக்கிய பிரதிநிதிகள் ஒன்று கூடி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். முஸ்லீம் பிரகடனம் 2023 என்ற தலைப்பில் இந்த அந்த கோரிக்கைகளில் முக்கியமானது முஸ்லீம்களுக்கு மாநிலத்தில் 10-12 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும்.

தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது முதலே கடந்த 9 ஆண்டுகளாக முஸ்லீம் இட ஒதுக்கீடு குறித்து அங்கு விவாதம் நடந்துள்ளது.. இருந்த போதிலும், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இட ஒதுக்கீடு: முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை முதலில் சொன்னவரே இன்றைய தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் தான். கடந்த 2014இல் தெலுங்கானா ஷாத்நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்களிடையே பேசிய கே.சந்திரசேகர் ராவ், "காங்கிரஸும் தெலுங்கு தேசம் கட்சியும் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், 12 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் அமல்படுத்துவோம்" என்று பேசியிருந்தார்.
தொடர்ந்து 2017இல் பிஆர்எஸ் கட்சி தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினருக்குக் கல்வி மற்றும் மாநில வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. இதன் மூலம் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதே தெலுங்கானா அரசின் நோக்கமாக இருந்தது. இருப்பினும், இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை. மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று மத்திய பாஜக அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
முஸ்லீம் பிரகடனம்: கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட முஸ்லீம் பிரகடனம் 2023இல் இந்த மசோதாவை அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றாது என்று நன்கு தெரிந்தே டிஆர்எஸ் அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பியது. நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த பல மசோதாக்களுக்கு கேசிஆர் ஆதரவு கொடுத்தார். அப்போது கூட அவர் முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்து எந்த அழுத்தமும் தரவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கே நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது 2014, 2018 ஆண்டுகளில் பிஆர்எஸ் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்ற வாக்குறுதி இருந்தது. ஆனால், 2023 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் போராட்டம்: தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டிற்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.. ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த சமயத்தில் கடந்த 2004இல் அப்போதைய காங்கிரஸ் அரசின் முதல்வர் ஒய்எஸ் சந்திரசேகர ரெட்டி முஸ்லிம்களை ஓபிசிகளாகக் கருதி, ஐந்தாவது பிரிவை (ஓபிசி-இ) உருவாக்கி அவர்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதித்து அரசு ஆணை பிறப்பித்தார். இருப்பினும் 50% இட ஒதுக்கீடு வரம்பைத் தாண்டுவதாகக் கூறி ஆந்திர ஐகோர்ட் இதை ரத்து செய்ததது.
அதன் பிறகு 2005இஸ் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீட்டை வழங்கும் அரசாணையை வெளியிட்டார். அதையும் 50% இட ஒதுக்கீடு வரம்பைத் தாண்டுவதாகக் கூறி ஆந்திர ஐகோர்ட் அமர்வு ரத்து செய்தது. இதையடுத்து, 50% வரம்பிற்குள் இருக்கும் வகையில் கடந்த 2007இல் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ஆந்திர அரசு பிறப்பித்தது. இது பாகுபாட்டைத் தடை செய்யும் பிரிவு 14க்கு எதிராக இருப்பதாகச் சொல்லி ஆந்திர ஐகோர்ட் டிஸ்மிஸ் செய்தது.
சட்ட சிக்கல்: இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அப்போது முதலே இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கவே இல்லை. பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்கள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தொடர்ந்து கூறும் நிலையில், பாஜகவை பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்ற தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்தச் சூழலில் தெலுங்கானாவின் பிஆர்எஸ் அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியே முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு 2021இல் அமலுக்கு வந்தது. மேலும், எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் 6இல் இருந்து 10%ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு 64%ஆக அதிகரித்தது. எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை கேசிஆர் அரசு மசோதா மூலம் நிறைவேற்றாமல் அரசாணை மூலம் கொண்டு வந்தது. இதன் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலேயே அதைக் கொண்டு வர முடிந்தது.
அடுத்து என்ன: இதுவும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முஸ்லீம் பிரகடனம் 2023இல் இது குறித்துக் கூறுகையில், "எஸ்டிகளுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டபோது, முஸ்லிம்களுக்கும் 12 சதவீதத்தை அமல்படுத்தியிருக்கலாம். ஆனால், கேசிஆர் அரசு இதைச் செய்யத் தவறியது. தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார் கே.சி.ஆர்" என்று அதில் காட்டமான கருத்துகளைக் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் வரும் தேர்தலில் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகவும் காங்கிரசுக்கு ஆதரவாகவும் மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications