150 மீ பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பயணிகளின் வேன்! 12 பேர் சடலமாக மீட்பு! உத்தரகாண்டில் சோகம்
டேராடூன்: உத்தரகாண்ட மாநிலத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்த பயணிகள் வேன் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலிருந்து பயணிகளுடன் டெம்போ டிராவ்லர் வேன் ஒன்று கேதர்நாத்துக்கு சென்றிருக்கிறது. இந்த வேன் ருத்ரபிரயாக் மாவட்டம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 150 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. விபத்து குறித்து சக வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

வேன் கவிழ்ந்த பள்ளத்திலிருந்து தற்போது வரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறுகையில்,
"விபத்தில் சிக்கிய வாகனம் நொய்டாவிலிருந்து வந்திருக்கிறது. நொய்டாவிலிருந்து ருத்ரபிரயாக் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து தெரியவில்லை. 150 மீ பள்ளத்திலிருந்து 12 பேரின் உடல்களை மீட்டிருக்கிறோம். டிரைவர் பலத்த காயமடைந்திருக்கிறார். மீட்பு பணி முழுமையாக முடிந்த பின்னரே மேலதிக விவகாரங்களை தெரிவிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். "காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவர்கள் விமானம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையில் விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications