வாழ்க்கையை சீரழித்த “சீரியல்”- தூக்குப் போட்டுக் கொள்வதாக நடித்து இறந்து போன 11 வயது சிறுவன்!
மும்பை: மும்பையில் தனது அக்காவிடம் தனது வீர பராக்கிரமத்தைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு விளையாடிய சிறுவனின் செயல் வினையாகிப் போனது.
தூக்குப் போடுவது போல செய்து காட்டியபோது அந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக நிஜமாகவே இறந்து போனான்.
மகாராஷ்டிராவின் மரத்வாடா பிராந்தியம், பீத் மாவட்டத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உருதுப் பள்ளியில் நான்காவது வகுப்பு படித்து வந்த சிறுவன் ஷேக் சஜத் ஷேஜ் வஜத். தனது குடும்பத்தினருடன் அம்பஜோகாய் என்ற இடத்தில் வசித்து வந்தான்.
சீரியலால் வினை:
சம்பவத்தன்று தனது அக்கா மற்றும் அண்ணனுடன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன் வஜத். அப்போது டிவி சீரியலில் தூக்குப் போடும் காட்சி ஒன்று வந்துள்ளது.
அப்படியே செய்த சிறுவன்:
இதையடுத்து அதில் வருவது போல செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறி தூக்குப் போடுவது போல நடித்துள்ளான் சிறுவன். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தை கயிறு நெறித்ததில் பரிதாபமாக உயிரிழந்து விட்டான் வஜத்.
சாதாரண ஏழைக்குடும்பம்:
அந்த சமயத்தில் சிறுவனின் தாயாரும், தந்தையும் வீட்டில் இல்லை. இருவரும் சாதாரண வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருபவர்கள். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள்தான் காரணமா?:
போலீஸ் தரப்பில் கூறுகையில், "கடந்த மாதம் தனது தந்தையிடம் சைக்கிள் வாங்கித் தருமாறு சஜத் கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை வாங்கித் தரவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்தானாம் வஜத். அதனால் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.