மும்பையில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவன் கொலை - துண்டு துண்டாக உடல் பாகங்கள் மீட்பு
மும்பை: மும்பையில் சமீபத்தில் கடத்தப்பட்ட 12 வயது சிறுவனின் உடல் சிறுசிறு துண்டுகளாக தானேயின் அருகில் கல்யாண் என்ற இடத்தில் திங்களன்று கண்டறியப்பட்டுள்ளது.
ரோஹன் குச்சிட் என்ற அந்த சிறுவன் ஒரு 7 ஆம் வகுப்பு மாணவன். ஆல் செயிண்ட்ஸ் பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவன் ஒரு எலெக்ட்ரீசியன் மூலம் கடத்தப்பட்டான்.அவன்தான் தற்போது, சிறுவனை மின்சார ரம்பம் மூலம் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டிருக்கின்றான்.
ரோஹனின் பெற்றோர் சிறுவன் கடத்தலைப் பற்றி கடந்த ஏப்ரல் 17 அன்று பாஸர்பாத் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
அதன்பின்னர், சிறுவனின் தந்தையான நகைக்கடை வைத்திருக்கும் உத்தம்பாய் குச்சாலிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.அதில் 50 லட்சம் கொடுத்தால்தான் சிறுவனை விடுதலை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டனர்.அது தெரிய வந்ததும்தான் கடத்தல் செய்தவன் சிறுவனை கோவத்தில் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுள்ளான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, துண்டாக வெட்டப்பட்ட கால்களை கிவிந்த்வாடி பூ சந்தையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.அடையாளத்திற்கான சோதனைகளின் போது அது ஒரு 12 வயது மதிக்கத்தக்க சிறுவனுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறுவனின் தந்தையும் அது தன் மகனுடையதுதான் என்பதை உறுதி செய்தார்.இன்று காலையில் மீதிப்பாகங்களும் ஒரு சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஸர்பாத் போலீசார் இதனைப் பற்றி, "நான்கு பேர் இந்தக் கொலையின் பிண்ணனியில் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.