மேகாலயாவில் வெள்ளம்.. சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 பேரின் நிலை என்ன?
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜெயின்தியா மலைகளில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்க பொந்துகளில் பணியாற்றிய 13 பேர் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கிழக்கு ஜெயின்தியா மலைகளில் எலி பொந்து அளவிலான ஓட்டைகை தோண்டி அதன் மூலம் நிலக்கரி எடுப்பர். இது போன்ற பொந்துகள் ஆபத்து மிக்கவை என்பதால் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய தீர்ப்பாயம் தடை விதித்தது.
இந்த தடையையும் மீறி இந்த சுரங்கம் லைடீன் நதிக்கு அருகே நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் 13 சுரங்க ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

360 அடி ஆழம்
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் பள்ளம் தோண்டும் போது சரிந்து அதில் விழுந்தனர். சுமார் 360 அடி ஆழ பள்ளத்தில் 70 அடிக்கு நீர் தேங்கியுள்ளது.

ஆபத்து
இதனால் இவர்கள் வெளியே வர இயலவில்லை. இது குறித்து தகவலறிந்த 100-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பொந்துகள் மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

15 பேர் பலி
இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் படகுகள் மற்றும் கிரேன்கள் மூலம் 13 பேரையும் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2012-ஆம் ஆண்டு இது போல் 15 பேர் சுரங்கத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் கூட இதுவரை மீட்கப்படவில்லை.

இருட்டு பொந்து
இந்த சுரங்கத்தின் வரைப்படம் ஏதும் இல்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பொந்துகள் இருட்டாக இருப்பதால் உள்ளே இருப்பவர்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பாக சுரங்கத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 பேர்
தாய்லாந்தின் தாம் லூவாங் குகைக்கு 12 மாணவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். அப்போது திடீர் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இதையடுத்து பெரும் போராட்டத்துக்கு பின்னர் 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications