வர்தா புயல்.... வெள்ளத்தில் மிதக்கும் அந்தமான்- 1,400 சுற்றுலா பயணிகள் தவிப்பு #cyclonevardah
வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் காரணமாக அந்தமானில் கனமழை கொட்டி வருகிறது. காற்றின் வேகத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1400 சுற்றுலா பயணிகள் அங்கு தவித்து வருகின்றனர்.
அந்தமான்: வங்கக்கடலில் வர்தா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ இப்போது மையம் கொண்டுள்ளது வர்தா. முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையில் நகரும் என்றும் ஆந்திராவில் வரும் 11ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயலின் தாக்கத்தால் கனமழை கொட்டிவருகிறது. அந்தமான் தீவுகள் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அந்தமான் அருகே ஹேவ்லாக், நீல் தீவுகளுக்கு படகுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஹேவ்லாக் தீவில் 1,400 சுற்றுலா பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். வானிலை மோசமாக இருப்பதால் சுற்றுலாப் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே அந்தமான் தீவுகளில் கடும் மழையில் சிக்கிக் கொண்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தீவில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக அந்தமானின் ஆளுநர் ஜெகதீஷ் முகி உடன் விவாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சூறாவளி தீவிரம் குறைந்த பின்னர் உடனடியாக அரசு மீட்பு நடவடிக்கைகளை தொடங்கும். தற்போது மீட்பு பணிக்காக போர்ட் பிளேரில் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.