பெங்களூர் அருகே 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16வயது சிறுவன் கைது
பெங்களூர்: பெங்களூர் அருகே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3வயது சிறுமியை பலாத்காரம் செய்த, பஞ்சாயத்து உறுப்பினரின் 16 வயது மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டான்.
பெங்களூரிலுள்ள முன்னணி பள்ளியொன்றில் ஆறு வயது மாணவி, பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த காயம் மக்கள் மனதில் இன்னும் ஆறவில்லை. இந்நிலையில் பெங்களூர் அடுத்த கனகபுரா தாலுகா, தலகுப்பே கிராமத்தில் 3வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும், அக் கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் 16வயது மகன் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீடுபுகுந்த சிறுவன் இந்த துர்செயலில் ஈடுபட்டுள்ளான்.
சிறுமி தனது அடிவயிற்றில் வலி இருப்பதாக கூறி அழுததை தொடர்ந்து மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் பாலியல் பலாத்காரத்தால் சிறுமிக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். இச்சிறுமிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தால், சிறுமி நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.
மேல் சிகிச்சைக்காக பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக பெங்களூர் ஊரக போலீஸ் எஸ்.பி அனுபம் அகர்வால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications