பள்ளி பேருந்து விபத்து... 2 குழந்தைகளைப் பறி கொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் தனது இரண்டு குழந்தைகள் பலியான சோகத்தை தாங்க முடியாமல் அக்குழந்தைகளின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். ஒரே நாளில் அக்குடும்பத்தில் மூவர் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவர்கள் பயணம் செய்த பள்ளி பேருந்து ஒன்று நேற்று காலை ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே 18 குழந்தைகள் பலியாயினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 குழந்தைகளில், 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் சோகம் என்னவென்றால், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் அண்ணன், அக்கா, தம்பி மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
அந்தவகையில், கிருஷ்ணாபாத் பகுதியைச் சேர்ந்த அக்காள், தம்பி ரஜியா, ஹமீத் ஆகியோரும் இந்த விபத்தில் பலியானார்கள். இவர்களின் தந்தை முகமது வகீத் விபத்து நடந்த 10 நிமிடத்துக்கு முன்புதான் குழந்தைகளை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே பள்ளி பேருந்து ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக வகீத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சியடைந்த வகீத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு தனது குழந்தைகளை சடலமாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வகீத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வகீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களிலேயே கணவன் மற்றும் தன் இரண்டு குழந்தைகளை இழந்து அனாதையான வகீத்தின் மனைவி கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.












Click it and Unblock the Notifications