ஆந்திராவைப் புரட்டிப் போட்ட அடைமழை- மின்னல் தாக்கி 19 பேர் பரிதாப பலி; நிவாரணத் தொகை அறிவிப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களை நேற்று சுழன்றடித்த கன மழையின் விளைவாக மின்னல் தாக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக, கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த இடியுடன் கூடிய பெருமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
பிரகாசம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேரும், நெல்லூர் மாவட்டத்தில் ஐந்து பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேரும், குண்டூர் மாவட்டத்தில் இருவரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருவரும் நேற்று மின்னல் தாக்கி பலியாகினர்.

குண்டூர் மாவட்டத்தில் நேற்று ஒரு விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆந்திரா, திரிபுரா மகளிர் குழுவினர் அதிர்ஷ்டவசமாக மின்னலின் தாக்கத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தனர். மழைக்காக அவர்கள் விளையாட்டரங்கத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் ஒதுங்கி நின்றிருந்த வேளையில் விளையாட்டரங்கத்தின் உள்ளே பாய்ந்த மின்னல்பட்டு அங்கிருந்த ஒரு பெரிய மரம் முழுவதுமாக எரிந்து கருகியது.
மின்னல் தாக்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தாருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications