1993 மும்பை குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்குத் தண்டனை.. அபு சலீமுக்கு ஆயுள்!
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது தடா நீதிமன்றம்.
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மும்பையில் உள்ள பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கான சிறப்பு நீதிமன்றம் (தடா) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் பெரோஸ் அப்துல் ரஷீத் கான், தாஹிர், அபு சலீம், கரிமுல்லா கான், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முஸ்தபா சிறையிலேயே இயற்கையாக மரணம் அடைந்துவிட்டார்.
மற்ற 4 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மற்றும் தாஹிர் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், அபு சலீம் மற்றும் கரிமுல்லா கான் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டது.