2 அக்னிவீரர்கள் உயிரிழப்பு.. பயிற்சியின் போது துப்பாக்கி ஷெல் வெடித்து விபத்து.. நாசிக்கில் பரிதாபம்
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கியின் ஷெல் வெடித்ததில் இரண்டு அக்னிவீரர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு அக்னிவீர் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தில் கீழ் வீரர்கள் 5 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஆயுதப் படைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். இவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

இந்த அக்னி வீரர்களால் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும். அதன் பிறகு அதில் 25% மட்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற 75% பேர் விடுவிக்கப்படுவார்கள். இதுவரை பல பேட்ச்களில் அக்னி வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகிறார்கள்.
இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு அக்னி வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில், அப்போது எதிர்பார்க்காத வகையில் துப்பாக்கியின் ஷெல் வெடித்ததில் இரண்டு அக்னி வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் நாசிக் சாலை உள்ள பீரங்கி மையத்தில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் உயிரிழந்த அக்னி வீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங் (20), சைபத் ஷித் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது..
இந்திய பீல்ட் துப்பாக்கி வகையைச் சுடும் பயிற்சியில் அக்னி வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கியின் ஷெல் ஒன்று வெடித்துள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தியோலாலியில் உள்ள எம்எச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கேம்ப் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications