ஜார்க்கண்ட் வைத்யநாத் பக்தர்களிடம் கொள்ளையடித்த திருடர்கள்- அடித்தே கொன்ற பொதுமக்கள்!
கயா: ஜார்கண்ட்டில் கோவில் பக்தர்களிடம் கொள்ளையடித்த இரண்டு பேரை பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் அருகே நேற்று காலை சிவபக்தர்கள் வைத்யநாத் தாம் நோக்கி சாலையோரமாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 4 பேர் துப்பாக்கி முனையில் சிவபக்தர்களிடம் அவர்களது பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இந்த தகவல் உள்ளூர் கிராம மக்களுக்கு கிடைத்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 4 கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்து கண்மூடித்தனமாக தர்ம அடி கொடுத்தனர்.
இதில் 2 கொள்ளையர்கள் அந்த இடத்திலேயே இறந்தனர். தகவல் கிடைத்து அங்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் சிக்கிய ஒரு கொள்ளையனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவனது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவன் காயத்துடன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி தாண்டிர் கிராம தலைவர் வீட்டில் தஞ்சம் புகுந்தான். இறந்துபோன 2 கொள்ளையர்கள் யார் என அடையாளம் காண போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.