ஜம்மு-காஷ்மீரில் அரசு அலுவலகத்தில் பதுங்கிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்போரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நீடித்து வந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்போர் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள விடுதிக்குள் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்தனர். பின்னர், அங்கிருந்த படுக்கைகளை தீயிட்டு கொளுத்தினர். இதனையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். இதனைக் கண்ட தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர் காயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அரசு கட்டடத்திற்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகள் எத்தனைப் பேர் என்பது தெரியாத நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் கடும் தாக்குதலை தீவிரவாதிகள் மீது நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் பெரும்பாலான பகுதிகளில் காவல் துறை ஊரடங்கு உத்தரவை நேற்று அமல்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications