ஜெகன் மோகனுக்கு முதல் 'செட்பேக்'... தெலுங்கு தேசத்திற்குத் தாவிய 2 எம்.பிக்கள்
ஹைதராபாத்: சீமாந்திராவில் கணிசமான வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சியாகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அக்கட்சியின் இரு எம்.பிக்கள் அதிரடியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்குத் தாவியுள்ளனர். சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் ஜெகன் மோகன் கட்சியின் இரு எம்.பிக்கள் கட்சி தாவியுள்ளதால் சீமாந்திரா அரசியலில் பரபரப்புஏற்பட்டுள்ளது.
மூன்று முறை நந்தியால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றவருமான எஸ்.பி.ஒய் ரெட்டி தெலுங்குதேசத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த லோக்சபாதேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்றவர் ஆவார்.
இதேபோல இன்னொரு எம்.பியும் தெலுங்கு தேசத்திற்குத் தாவியுள்ளதாக தெரிகிறது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
சீமாந்திரா மாநிலத்தில் அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 175 சட்ட சபை இடங்களில் 67 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. எம்.பி. தொகுதியில் மொத்தமுள்ள 25 இடங்களில் 9 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த எஸ்.பி.ஒய். ரெட்டி உள்பட 2 எம்.பி.க்கள் இன்று தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர்.