சர்ச்சைக்குரிய 'நிர்பயா' ஆவணப்படத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!!
டெல்லி: பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட இளம்பெண் நிர்பயா குறித்த ஆவணப்படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி ஒருவர் காமுகர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதில் படுகாயமடைந்த அப்பெண்ணுக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் 13 நாட்களுக்குப் பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் குற்றவாளிகள் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் நினைவாக 'நிர்பயா' என்ற குறியீட்டுப் பெயருடன் மத்திய அரசும் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்பட்டு வருகிறது. 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கு என பொதுவாக அழைக்கப்படும் இந்த சம்பவம் குறித்து பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினமாகிய மார்ச் 8-ந் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த ஆவணப் படத்துக்காக இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்சிங் என்பவன் டெல்லி திஹார் சிறையில் இருந்தபடியே அளித்த பேட்டியில், நாங்கள் பலாத்காரம் செய்த போது அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் கொலை செய்தோம். அப்பெண்ணை பலாத்காரம் செய்ய அவர்தான் பொறுப்பு.. பெண்கள் அணியும் உடைகள் போன்றவைதான் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட தூண்டுகிறார்கள்.. 20% பெண்கள்தான் நல்லவர்கள்" என படுதிமிராகப் பேட்டியளித்திருந்தான்.
இந்தப் பேட்டி பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு திஹார் சிறை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் முகேஷ் சிங்கின் பேட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீசாரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், குற்றவாளி முகேஷ்சிங் பேட்டியுடன் கூடிய நிர்பயா ஆவணப்படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.