2015-ல் ஐஏஎஸ் பேட்ச்... செகன்ட் ரேங்கைக் கைப்பிடிக்கும் ஃபர்ஸ்ட் ரேங்க் பெண்!
டெல்லி: கிட்டத்தட்ட தமிழில் வந்த வானவில், தனிஒருவன் சினிமா கதை மாதிரிதான் இதுவும். கடந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த பெண்ணான டினா டாபி, தனக்கு அடுத்த இடத்தில் தேர்ச்சி பெற்ற அதர் ஆமிர் உல் ஷபி கானை காதலித்து மணக்கவிருக்கிறார்.
இருவரும் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதல் இரு இடங்களைப் பிடித்தவர்கள். இருவரும் கடந்த மே மாதம், மத்திய அரசின் நார்த் ப்ளாக்கில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது சந்தித்துக் கொண்டார்கள். அப்போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

அதாவது பார்த்தவுடன் காதல். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். "உண்மைதான். என்னைப் பார்த்த அடுத்த நொடியே காதலிக்க ஆரம்பித்துவிட்டார் ஆமிர். அன்று மாலையே என் அறைக்கு வந்துவிட்டார். அவர் ஒரு அற்புதமான மனிதர். எனக்காகவே தன்னை அர்ப்பணித்துவிட்டார்," என்கிறார் டாபி.
பிறகென்ன... இருவரும் விடுமுறை நாட்களில் அழகிய சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றி வருவதும் அந்தப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவதுமாக இருக்க, விஷயம் வெளியில் தெரிந்து இப்போது செய்தியாகிவிட்டது.
இருவரின் பெற்றோர்களும் இந்த காதல் மற்றும் திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம். இன்னும் திருமணத் தேதி நிச்சயிக்கப்படவில்லையாம்.
ஆனால் தலித் பெண்ணான டாபி, வேறு மதத்தைச் சேர்ந்தவரைக் காதலித்து திருமணம் செய்வதற்கு சமூக வலைத் தளங்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாபி கூறுகையில், "ஒரு தலித் பெண், வேறு சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவரைக் காதலிப்பது குற்றமா? யாருக்காகவும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை," என்கிறார்.
தலித் மாணவிகள் தன்னை ஒரு முன்னுதாரணமாகக் கருதுவது குறித்து டாபி கூறுகையில், "இது ஒரு தேர்வு அவ்வளவுதான். அப்படி நினைத்துப் படித்து முதலிடத்துக்கு வர ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். தலித் பெண் டாப் இடம் பிடிப்பது கஷ்டம்தான். ஆனால் முயற்சித்தால் முடியாதது இல்லை," என்கிறார்.
இப்போது முசோரியில் ஐஏஎஸ் பயிற்சியில் உள்ள டாபி - ஆமிர், பயிற்சி முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்.
ஐஏஎஸ் தேர்வில் ஆமிர் முதலிடத்தைத் தவற விட்டாலும், வாழ்க்கையில் ஒரு முதலிடத்தை அடைந்துவிட்டார்!












Click it and Unblock the Notifications