சகிப்புத்தன்மை விவகாரம்: 24 திரைக் கலைஞர்கள் தேசிய விருதுகளை 'மொத்தமாக' திருப்பி அளிக்கின்றனர்
சென்னை: சகிப்புத்தன்மை விவகாரத்தில் திரையுலகைச் சேர்ந்த 24 திரைக் கலைஞர்கள் தங்கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.
திரைக் கலைஞர்கள் ஒருபக்கம் தேசிய விருதுகளை திரும்ப அளித்து வருகின்றனர், மற்றொருபுறத்தில் தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைப்பது தவறு என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 24 திரைக் கலைஞர்கள் நாடு முழுவதுமிருந்து தங்கள் தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளனர்.

அருந்ததி ராய்
இந்தப் போராட்டத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்திருக்கிறார். 1988-ம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற அருந்ததி ராய் தனது விருதை திருப்பியளிக்கிறார்.இவர் மட்டுமன்று மூத்த திரை இயக்குநர்கள்,சயீத் மிர்சா, குந்தன் ஷா, ஆகிய மூத்த திரை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் விரேந்திர சைனி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.
தொடர் படுகொலைகள்
தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை, எழுத்தாளர்கள் கல்பர்கி உள்ளிட்டோர் படுகொலை, புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
சகிப்புத்தன்மை
இந்நிலையில் நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கு மற்றும் மத்திய அரசு மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாக இவர்களால் முன்வைக்கப்படுகின்றன.
ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகள்
அஜய் ரெய்னா, ஒளிப்பதிவாளர்கள் ரஞ்சன் பாலித் மற்றும் மனோஜ் லோபோ, சமூக செயல்பாட்டாளரும் இயக்குநர்களுமான தபன் போஸ், சஞ்சய் காக், மதுஸ்ரீ தத்தா, பிரதீப் கிரிஷன் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை திரும்பி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதை திருப்பி அளிக்கும் கலைஞர்கள் பெயர் விவரம்
அருந்ததி ராய்,சயீத் மிர்சா,குந்தன் ஷா,விரேந்திர சைனி,அஜய் ரெய்னா,ரஞ்சன் பாலித்,மனோஜ் லோபோ,தபன் போஸ்,சஞ்சய் காக்,மதுஸ்ரீ தத்தா,பிரதீப் கிரிஷென்,ஸ்ரீபிரகாஷ்,விவேக் சச்சிதானந்த்,பி.எம்.சதீஷ்,தருண் பாரிதியா,அமிதபா சக்ரவர்த்தி,ரபீக் இலியாஸ்,சுதாகர் ரெட்டி யக்கான்ட்டி,அன்வர்ஜமால், சுதீர் பல்சானே,மனோஜ் நிதர்வால் ,ஐரீன் தார் மாலிக் மற்றும் சத்ய ராஜ் நாக்பால் ஆகிய 24 பேரும் தங்கள் தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர்.
பல பிரச்சினைகளை இந்தத் திரைக் கலைஞர்கள் முன்வைத்தாலும் கூட சகிப்புத்தன்மை விவகாரத்தை முன்னிறுத்தியே, தேசிய விருதுகளை இவர்கள் திருப்பி அளிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications