4 ஆண்டுகளில் விபத்துக்குள்ளான 24 இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள்!
டெல்லி: கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய கடற்படைக்குச் சொந்தமான 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த விபத்துக்களில் 22 கடற்படையினர் பலியாகியுள்ளதாகவும், 4 பேரைக் காணவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராஜ்யசபாவில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்களுக்கு மனிதத் தவறுகளும், தொழில்நுட்பக் கோளாறுகளுமே காரணமாக இருந்துள்ளதாக விசாரணைக் கமிட்டிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார் பாரிக்கர்.

2011 மற்றும் 12 ஆகிய ஆண்டுகளில் 3 விபத்துக்கள் நடந்துள்ளன. 2013ல் 7 விபத்துக்கள் நடந்துள்ளன. 2014 நவம்பர் 6ம் தேதி வரை 11 விபத்துக்கள் நடந்துள்ளன. 2013ல் நடந்த விபத்துக்களில் முக்கியமானது ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் கப்பலில் நடந்த விபத்து. இதில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடைசியாக நவம்பர் 6ம் தேதி டிஆர்வி 72 கப்பல் விசாகப்பட்டனம் அருகே கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். நான்கு பேரை இன்னும் மீட்க முடியவில்லை.
கடந்த 2012-13 ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி வரை 24 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.
விமானங்கள் நொறுங்கியது உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ரூ. 536.98 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications