சீரியல், சண்டை, கேலி, கிண்டல், செய்தி- அனுமதிக்காக வரிசை கட்டி நிற்கும் 260 சேனல்கள்!
டெல்லி: இந்தியாவில் தற்போது 800க்கும் அதிகமான தனியார் டி.வி சேனல்கள் இயங்கிவரும் நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புதிதாக லைசென்ஸ் கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் மொத்தம் 955 தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இவற்றில் 125 அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் 830 தனியார் சேனல்கள் இயங்கி வருகின்றன.

அன்றாட நிகழ்வுகள்:
இவற்றில், 398 செய்தி சேனல்களாகும். 432 சேனல்கள் செய்திசாராத பொழுதுப்போக்கு அம்சங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பானவையாகும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்:
கடந்த ஓராண்டு காலமாக செய்தி சேனல்களைவிட செய்திசாராத பொழுதுப்போக்கு அம்சங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான சேனல்களை தொடங்க அதிகமானோர் மனு செய்துவருவதாக தெரிகின்றது.
சேனல்களுக்கு அனுமதி:
கடந்த ஆண்டில் மட்டும் 14 செய்தி சேனல்களுக்கும், 31 செய்திசாராத பொழுதுப்போக்கு சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்திடம் மனு:
புதிதாக சேனல் தொடங்க மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பதாகவும், இந்த ஆண்டின் நவம்பர் மாதம்வரை 39 செய்திசாராத பொழுதுப்போக்கு சேனல்களுக்கும், 3 செய்தி சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications