மிரட்டல் வருகிறதா?... கலைஞர் டிவி பொதுமேலாளரிடம் கேட்ட நீதிபதி ஓ.பி. சைனி
டெல்லி: கலைஞர் டி.விக்கு எதிரான வழக்கில் அமலாக்கப் பிரிவின் சார்பாக சாட்சியம் அளிப்பது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது மிரட்டல்கள் வருகின்றனவா? என்று கலைஞர் டிவி பொது மேலாளர் ராஜேந்திரனிடம் சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தொடங்கிய போது அவசரம் அவசரமாக இந்த பணம் 'கடனாக' பெறப்பட்டு 'திருப்பி' கொடுக்கப்பட்டதாக கலைஞர் டி.வி. அறிவித்தது.
இந்தப் பணப்பரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கப் பிரிவும் தனியே வழக்குப் பதிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலைஞர் டி.வி.யின் பொதுமேலாளர் ராஜேந்திரன் நேற்று அமலாக்கப் பிரிவின் சார்பாக சாட்சியம் அளித்தார்.
அப்போது, கலைஞர் டிவியின் 2008-09 ஆண்டறிக்கை நகல்களை கலைஞர் டிவியின் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் வழங்கவில்லை. பங்குதாரர்கள் கூட்டத்திலும் நான் கலந்து கொண்டதில்லை. சினியூக் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே பங்குகள் வாங்குவது தொடர்பான ஆவணம் தயாரிக்கப்பட்டது எனக்கு தெரியும். அந்த வேளையில், தயாளு அம்மாள், கனிமொழி, சரத் குமார் ஆகியோர் கலைஞர் டிவியின் பங்குதாரர்களாக இருந்தனர்' என்று ராஜேந்திரன் கூறினார்.
கலைஞர் தொலைக்காட்சிக்கும் சினியுக் நிறுவனத்துக்கு இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனையில் கலைஞர் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஆ.ராசாவுக்கு தொடர்பு?
இதில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆகிவற்றுக்கு தொடர்பு இல்லை என்றார். இரு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, சினியுக் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சியிடம் பணத்தைத் திருப்பி அளிக்கும்படி கோரியது என்றும் அவர் கூறினார்.
அடிக்கடி ஒத்திவைப்பு
இதையடுத்து, மத்திய அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கறிஞர் கே.கே. கோயல், அவரிடம் மேற்கொண்டு கேள்வி எழுப்பாமல் தவிர்த்தார். "இந்த வழக்கு விசாரணையை சிறிது நேரம் இடைவெளி விட்டு தொடர வேண்டும்' என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதனால் கோபமடைந்த சிறப்பு நீதிபதி சைனி, இத்தகைய கோரிக்கைகளை சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பு அடிக்கடி முன்வைப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
மாற்றலாகிவிடுங்கள்
மேலும் அவர், இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட 5 அரசு தரப்பு சாட்சியங்களிடம் விரைந்து விசாரணை நடத்த ஒத்துழைப்பு அளிப்போம் என சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். ஆனால், தற்போது சிபிஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளன. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. வழக்கு விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் இல்லையென்றால், மாற்றாலாகி விடுங்கள் என்றார்.
மிரட்டல் வருகிறதா?
நீதிமன்ற வரம்பை மீறி செயல்பட முயற்சிக்க வேண்டாம்' எனவும் கண்டிப்புடன் நீதிபதி சைனி கூறினார். பின்னர் இந்த வழக்கை 15 நிமிடங்களுக்கு அவர் ஒத்திவைத்தார்.
இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது ராஜேந்திரனிடம் சிறப்பு நீதிபதி சைனி, , "இந்த வழக்கில் உங்களுக்கு ஏதாவது மிரட்டல்கள் விடுக்கப்படுகிறதா?' என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் ‘இல்லை' என்று கூறினார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து அமலாக்கத் துறை வழக்கறிஞர் கோயலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாஹித் பால்வா சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் ராஜேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். அவற்றைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.