பினாமி பெயர்களில் சொத்து குவித்தாரா ஆ.ராசா? சிபிஐ தீவிர விசாரணை
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பினாமிகள் மூலமாக சொத்து குவித்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2ஜி வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசா மீது சொத்துக்குவிப்பு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டு அவரது வீடு, அலுவலகங்களில் சில தினங்கள் முன்பு சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
15க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ராசா தனது உறவுக்காரர்கள், நண்பர்கள் மூலம், சொத்துக்களில் முதலீடு செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சொத்து மதிப்பு மற்றும் அவர்களின் வருவாய் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.