ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் பலி.. தண்டவாளத்தில் செல்பி எடுத்தபோது விபரீதம்
பெங்களூரு அருகே இன்று காலை தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு: பிடதியில் இன்று காலை தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிடதி. இங்குள்ள பெங்களூர்-மைசூர் மார்க்க தண்டவாளத்தில் இன்று காலை 3 இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
அப்போது ரயில் மோதியதில் 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்றவர்கள் ரயில் வரும் வேகத்தை தவறாக கணக்கிட்டு தண்டவாளத்தில் நின்றதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்தில் செல்பி
இளைஞர்கள் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதை அருகில் இருந்த மக்களும் எச்சரித்துள்ளனர். இருப்பினும அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது
உயிரிழந்த 3 பேரில் 2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் இருவரும் பெங்களூரு நேஷனல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

செல்பி எடுக்க முயற்சி
அவர்கள் பெங்களூரு அருகில் உள்ள வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவை பார்வையிட வந்துள்ளனர். அப்போது ரயில் முன்பு அவர்கள் செல்பி எடுக்க முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இரண்டாவது துயர சம்பவம்
தண்டவாளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை கொண்டு மற்றொருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் செல்பியால் ஏற்படும் இரண்டாவது துயர சம்பவம் இதுவாகும்.

கடந்த வாரம் நேர்ந்த சோகம்
கடந்த வாரம் பெங்களூரு நேஷனல் கல்லூரி நண்பர்கள் பெங்களூர் புறநகரிலுள்ள ஒரு ஏரியில் குளித்த போது சக நண்பன் விஷ்வாஸ் குளத்தில் மூழ்குவதை அறியாமல் செல்பி எடுத்தனர். பின்னர் குளத்தில் இருந்து அருகில் உள்ள கோயிலுக்கு சென்ற அவர்கள் அங்கு விஷ்வா வராததைக் கண்டு தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்களை பார்த்தனர்.

சோகத்தை ஏற்படுத்தியது
அதில் விஷ்வா நீரில் மூழ்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஷ்வாவை குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்
இந்நிலையில் இன்று செல்பி மோகத்தால் மூன்று கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் செல்பி மோகத்தால் பலியாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications