லடாக்கில் ஸ்கிராப் சென்டரில் பயங்கர குண்டு வெடிப்பு..3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
லடாக்: லடாக்கின் கார்கில் மாவட்டம் ட்ராஸ் நகரில் பழைய உடைந்த பொருட்கள் தளத்தில் மர்மமான முறையில் பயங்கரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரை அடுத்து உள்ள லடாக்கின் டராஸ் நகரில் பழைய பொருட்களை ஸ்கிராப் செய்யும் இடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சிலர் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று அந்த ஸ்கிராப் தளத்தில் திடிரென பயங்கரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்போது 3 பேர் இறந்து கிடந்தனர். 9 பேர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த குண்டுவெடிப்பு எப்படி நடந்தது என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. மர்மமான முறையில் குண்டு வெடித்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இறந்து போன மூன்று பேர் கூலித்தொழிலாளிகள் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை கார்கில் மாவட்ட போலீஸ் எஸ்பி அனயத் அலி சவுத்ரி உறுதி செய்துள்ளார்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருவதையும் அவர் உறுதி செய்தார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் வேறு ஏதேனும் குண்டுகள் உள்ளனவா என்பதை சோதித்தனர். அத்துடன் வெடித்த குண்டு எந்த மாதிரியான வகையை சேர்ந்தவை என்பது குறித்தும் மாதிரிகளை சேகரித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பிறகு எந்த மாதிரியான குண்டு வெடித்தது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications