நேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்
சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்ற செங்கோட்டையன் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கும் சிறை அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க செங்கோட்டையன் உட்பட 3 அமைச்சர்கள் சென்று சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
சசிகலாவை நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளரும், அவரது அக்கா மகனுமான டி.டி.வி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இதன்பிறகுதான், பெங்களூர் சிறையிலிருந்து, சென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரும் கோரிக்கையை சிறை அதிகாரியிடம் சசிகலா முன் வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவர் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்த சென்றனர். மதியம் 3 மணிக்கு அவர்கள் சந்திப்பதாக இருந்தது.
ஆனால் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டும், சிறை அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. தண்டனை கைதியை வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறை காரணமாக அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.